17 வருடம் கழித்து வந்தவர்களை எப்படி வெறும் கையுடன் அனுப்புவது? – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தோல்விக்கு கருத்து!

0
879
Pak vs Eng

ஏழு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது!

ஜோஸ் பட்லர் தலைமையில் வந்த இங்கிலாந்து அணி, பின்பு அவரது காயத்தால் மொயின் அலி தலைமையில் 7 போட்டிகளிலும் விளையாடியது. மேலும் இந்த இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், லியம் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ போன்ற முன்னணி வீரர்கள் கிடையாது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து அணி மிக எளிமையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஆனால் அடுத்து வெல்ல வேண்டிய மூன்றாவது போட்டியை இங்கிலாந்து அணி தோற்க, அதற்கு அடுத்த 2 போட்டிகளிலும் சேர்த்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணி வென்று தொடரில் 3-2 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆறாவது டி20 போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி வென்று தொடரை சமன் செய்தது. இந்த நிலையில்தான் நேற்று தொடர் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை மிக எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்தத் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ” இங்கிலாந்தை வைத்து எங்கள் உள்நாட்டில் தொடரை நடத்துவது பாக்கியம். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை எப்படி வெறும் கையுடன் அனுப்புவது? அதனால்தான் கோப்பையோடு வழி அனுப்பி வைக்கிறோம். ஆனால் இதை தவிர்த்து உண்மையாகவே அவர்கள் மிகச் சிறந்த அணி ” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் இது குறித்து பேசிய அவர்,
” இது ஒரு நீண்ட இதயபூர்வமான தொடராகும். கடைசி இரண்டு போட்டிகளை தவிர பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. இந்தத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி கற்றுக் கொள்ள சில விஷயங்கள் இருக்கிறது. இந்த அணியை எங்களது வாழ்த்துக்கள் உடன் நாங்கள் உலகக்கோப்பைக்கு அனுப்பி வைக்கிறோம். மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து அணிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது பயணம் பாதுகாப்பாக அமையட்டும்” என்று கூறியிருக்கிறார்.