இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட, இந்திய அணியின் இளம் ‘ஆல் ரவுண்டர்’ ‘வாஷிங்டன் சுந்தர்’ செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் .
பங்களாதேஷின் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வாஷிங்டன் சுந்தர் கலந்து கொண்டார் .
அப்போது நிருபர் ஒருவர் “இந்த எதிர்பாராத தோல்விக்கு பின் இந்திய வீரர்களின் மனநிலை எப்படி உள்ளது? அவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார் . இதற்கு பதில் அளித்த “வாஷிங்டன் சுந்தர் சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. அதனால் எல்லா போட்டிகளையும் ஒரு வாய்ப்பாக நினைத்தே நாங்கள் ஆடுகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அணியாக எங்களை எப்படி மேம்படுத்திக் கொள்வது அணியின் வெற்றிக்கு எவ்வாறு செயல்படுவது என்பது பற்றி சிந்திக்கிறோம்” என்று கூறினார்.
மேலும் பேசிய வாஷிங்டன் சுந்தர் “ஒவ்வொரு போட்டியிலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். எந்த அணிக்கு எதிராக ஆடினாலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட விரும்புகிறோம் . ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பாடம் இருக்கும் அவற்றை கற்றுக்கொண்டு ஒரு அணியாக முன்னேற முயற்சிக்கிறோம். எங்கள் திறமைக்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது எங்கள் வேலை அதை நாங்கள் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறோம். தோல்விகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டோம்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய சுந்தர் “இந்திய அணி தனக்கு என்ன ரோல் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வேன் என்று கூறினார் . மேலும் கடந்த இரண்டு டி20 உலக கோப்பைகளை காயம் காரணமாக ‘மிஸ்’ செய்தது தனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்ததாக”தெரிவித்தார்.