பங்களாதேஷ் அணியுடன் சந்தித்த மோசமான தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதல் கிரிக்கெட் விமர்சகர்கள் வரை அனைவரும் இந்திய அணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் .
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி கடந்த ஓராண்டுகளாகவே தங்களுடைய முழு தகுதிக்கு ஏற்ப ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை . இதனால் அதிருப்தி அடைந்த ‘பி.சி.சி.ஐ ‘ இந்திய அணியின் கேப்டன் ‘ரோகித் சர்மா’ தலைமை பயிற்சியாளர் ‘ராகுல் டிராவிட்’ மற்றும் முன்னாள் கேப்டன் ‘விராட் கோலி’ ஆகியோரை அவசரக் கூட்டத்திற்கு அழைத்துள்ளது .
சமீப காலமாக இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருவது வீரர்களின் உடல் தகுதி மற்றும் காயங்கள். கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறந்த பிட்னஸ் வீரர்களை கொண்ட அணியாக விளங்கிய இந்திய அணியில், தற்பொழுது வீரர்கள் காயங்கள் காரணமாக உடல் தகுதி இல்லாமல் இருப்பது முன்னாள் வீரர்களிடம் விமர்சகர்களிடமும் பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது .
இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா’ மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் ‘முகமது சமி’. ‘ஜஸ்பிரீத் பும்ரா’ ஆகியோர் காயங்களின் காரணமாக அணியில் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்கின்றனர் இது இந்திய அணிக்கு முக்கியமான போட்டிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரும் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பருமான ‘சபா கரீம்’ “காயம் அடைந்த வீரர்களை மட்டுமே நம்பி இருக்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அணியை பலப்படுத்துவது தான் சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார் .
இது குறித்து மேலும் பேசியுள்ள அவர் “முகமது சமி’ மற்றும் ‘ஜஸ்பிரீத் பும்ரா’ ஆகியோரின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு அவர்களை மட்டுமே சார்ந்து இருக்காமல், இளம் வேக பந்துவீச்சாளர்களை கொண்ட புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் அதுதான் சரியாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் நான் தற்பொழுது தேர்வு குழு தலைவராக இருந்தால் புதிய வேக பந்துவீச்சாளர்களை கொண்ட அணியை தான் கட்டமைக்க முயற்சித்து இருப்பேன். சமி மற்றும் பும்ரா ஆகியோரின் காயம் அடையும் கால இடைவெளியை பார்க்கும் பொழுது அவர்களைக் கடந்து புதிய வேகப் பந்து வீச்சுக்கான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் கூறினார்.
மேலும் இந்திய சுழற்சி பற்றி அவர் பேசும் போது ஒவ்வொரு தொடருக்கும் புதிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து முயற்சி செய்யாமல், நீங்கள் யார் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் என்று கருதுகிறீர்களோ? அவர்களை தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும். உதாரணமாக ‘ சஹால் அக்சர் ‘ மற்றும் ‘வாஷிங்டன் சுந்தர்’ ஆகியோர்தான் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் என்று நீங்கள் கருதினால் அவர்களுக்கு அதிகமான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுங்கள். நாம் பரிசோதனைக்கான கால அளவை தாண்டி விட்டோம். தற்பொழுது 50 ஓவருக்கான உலகக் கோப்பை அருகில் வந்து விட்டது என்றும் கூறினார் .
ஒரு வீரர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவர் காயமடைந்து விட்டால் அவரால் அணிக்கு எந்த பயனும் இல்லை.அதனால் காயமடைந்த வீரர்களை பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் ,திறமையான வீரர்களைக் கொண்டு அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று கூறி முடித்தார் .