இந்திய அணியின் அனைத்து வகை பார்மெட்டின் கேப்டனும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் ஷர்மா தன்னுடைய முப்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீர் ரோஹித் ஷர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
நல்லவேளை நான் தற்பொழுது கேப்டனாக இல்லை
“நான் பார்த்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மத்தியில் ஆகச் சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மா தான். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் பார்த்து பயந்த ஒரு கேப்டன் அவர். அவரது கேப்டன்சி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நல்லவேளை அவர் கேப்டனாக விளையாடிக் கொண்டிருக்கும் தற்சமயத்தில் நான் கேப்டனாக இல்லை என்று வெகுவாக பாராட்டி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார்.
Birthday greetings to the only batsman who’s given me nightmares as a captain. Thankfully I don’t captain anymore @ImRo45 pic.twitter.com/XzpEc9Ptal
— Gautam Gambhir (@GautamGambhir) April 30, 2022
ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் 20111 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தலைமை தாங்கி வந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு டெல்லி அணியில் ஆரம்பத்தில் கேப்டனாக விளையாடிய அவர் பின்னர் தன்னுடைய கேப்டன் பதவியை ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொடுத்தார்.
மறுபக்கம் ரோஹித் ஷர்மா 2013ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை மும்பை இந்தியன்ஸ் அணியை தலைமை தாங்கி வருகிறார். கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி மற்றும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பத்து முறை எதிர்கொண்டுள்ளது (2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையில்).
இதில் ஏழு முறை ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கண்டிருக்கிறது. மறுபக்கம் மூன்று முறை கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கண்டிருக்கிறது. அந்த ஐந்து ஆண்டு கால வேளையில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கிறார். மறுபக்கம் ரோஹித் ஷர்மா 2013,2015,2017,2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மிக சிறப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கிறார்