இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேசிய தேர்வுக் குழு உறுப்பினருமான சலில் அன்கோலா ஆரம்பத்தில் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்கும் பொழுது என்ன மாதிரியான சூழ்நிலை இருந்தது? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதன் முதலில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை சொந்த நாட்டில் விளையாடினார். இந்தத் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் உடன் மொத்தம் 712 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார்.
சரித்திர வெற்றியில் ஆட்டநாயகன் விருது
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியான முறையில் சரித்திர வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 52 பந்துகளில் அதிரடியாக 71 ரன்கள் ஜெய்ஸ்வால் குவித்தார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் 45 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். மேலும் இந்த போட்டியில் அவரை ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஜெய்ஸ்வால் 2019 ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டுக்கு மும்பை மாநில அணிக்காக விளையாட வந்தார். ஆனால் அவர் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் வேகமாக விளையாடுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினார். அதே சமயத்தில் அரை சதத்தை விட சதங்களை அதிகம் குவித்தார். அவரது அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியானது போலவே இல்லை.
நான்தான் நம்பி தேர்வு செய்தேன்
இது குறித்து பேசி இருக்கும் சலில் அன்கோலா கூறும் பொழுது “ஒரு தேர்வாளராக நான் உள்ளுணர்வின்படி சென்றேன். தேர்வாளர்கள் விரும்பும் மனப்பான்மை, திறமை மற்றும் தைரியம் ஜெய்ஸ்வாலிடம் இருந்தது. ஆனாலும் தேர்வுக்குழுவில் அவர் குறித்து பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருந்தது. அவரது ஆக்ரோஷமான பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவராது என நினைத்தார்கள். ஆனால் அவர் சரியாக இருப்பார் என நான் என் உள்ளுணர்வை நம்பினேன்”
“விளையாட்டு வேகமாகிவிட்டதையும் மேலும் இந்த சிறுவன் நிறைய சாதிப்பான் என்றும் நான் உணர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக மற்ற இரண்டு தேர்வாளர்கள் ஜெய்ஸ்வாலை ஆதரித்தார்கள். மேலும் நாங்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானது என ஜெய்ஸ்வால் நிரூபித்தார்”
இதையும் படிங்க : இன்று மகளிர் டி20 உலக கோப்பை 2024.. எந்த சேனலில் பார்க்கலாம்.?. போட்டி நேரம்.. முழு விபரம்
“ஜெய்ஸ்வாலை பார்க்கும்பொழுது ஒரு ஸ்பெஷல் என்று தெரிந்தது. ஒரு பேட்ஸ்மேனை பார்க்கும் பொழுது அவரது ஷாட்களின் வீச்சு முக்கியமானது. மேலும் அவரிடம் நல்ல டைமிங் இருக்கும் அதே வேளையில் நல்ல பவரும் இருக்கிறது.அவருடைய பேட் ஸ்விங் சிறப்பாக இருக்கும். ஒரு சில கிளீன் ஹிட்டர்களில் அவரும் ஒருவர். அவர் ஒரு தலைமுறையின் வீரர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.