” மீண்டும் வருகிறது 90s கிட்ஸ் கிரிக்கெட் சேனல் ” இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் தொடரை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்

0
1307
India vs West Indies

சுமார் 15 வருடங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட் ஒளிபரப்பு செய்வதற்கு களமிறங்குகிறது அனைவருக்கும் பிடித்தமான டிடி ஸ்போர்ட்ஸ் சேனல்.

இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் தொடர்களை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பு செய்ய சோனி லைவ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. கரீபியன் தீவுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை மட்டும் தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்வதற்கு பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பேன்கோட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

- Advertisement -

பேன்கோட் நிறுவனத்திடம் இணையதளம் மற்றும் செயலி வசதிகள் மட்டுமே இருக்கின்றன. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வதற்கு பிரத்தியேகமாக டிடி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு உள்ளூர் மற்றும் வெளிநாட்டின் போட்டிகளை ஒளிபரப்பு செய்து வந்த டிடி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பின் மூலம் மீண்டும் கிரிக்கெட் ஒளிபரப்பிற்கு வருகிறது.

பேன்கோட் நிறுவனம் 150 இன்டர்நேஷனல் போட்டிகள் மற்றும் 250 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கு கரீபியன் தீவுகளிடம் 2024ம் ஆண்டுவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. இவை அனைத்தையும் இணையதளம் மூலமாக அனைவருக்கும் வழங்குவதற்கும் இந்நிறுவனம் வசதிகளை பெற்றிருக்கிறது. ஆனால் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்வதற்கு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தொடர்ந்து ஒப்பந்தங்களை செய்து வருகிறது.

தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் போதும் கிரிக்கெட் தொடரை டிடி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ஒப்படைத்திருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து, நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய அந்தந்த நாடுகளில் உள்ள பிரதான தொலைக்காட்சி நிறுவனங்களுடன் அவ்வப்போது தற்காலிக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

- Advertisement -

இது குறித்து டிடி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகச் செயலாளர், மயன்க் குமார் அகர்வால் கூறுகையில், “இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது அனைத்து விளையாட்டுக்கும் தலைமையான ஒன்று. இதன் மூலம் ரசிகர்கள் பலர் ஒன்று கூடுகின்றனர். தங்களது வாழ்வின் ஒன்றாகவே கொண்டாடி வருகின்றனர். தொலைக்காட்சி மட்டுமல்ல, இணையதளம் வாயிலாக நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றோம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எந்த வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்; ரசிகர்களுக்கு எவ்வாறு புதிய அனுபவத்தை கொடுக்கலாம் என்பதை திட்டமிட்டு வருகிறோம்.” என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் மோதவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டியில் மற்றும் ஐந்து டி20 போட்டியில் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் கரீபியன் தீவுகளுக்கு சென்று விட்டனர். ஜூலை 22ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் ஆனது ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை நடைபெறவிருக்கிறது.