சென்னை அணியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் நான் இந்த அணியில் விளையாட விரும்புகிறேன் – தீபக் சஹர்

0
3501
Deepak Chahar CSK

இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி தலைமையின்கீழ் விளையாடினார். பின்னர் 2017 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணியில் விளையாடினார்.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 80 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியது. 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை அணிக்காக மிக அற்புதமாக இவர் விளையாடி இருக்கிறார். 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மொத்தமாக 58 விக்கெட்டுகளை சென்னை அணிக்காக கைப்பற்றியிருக்கிறார். சென்னை அணிக்கு பவர் பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

- Advertisement -

மீண்டும் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய சென்னை அணி

சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் இவரை மீண்டும் சென்னை அணி 14 கோடி ரூபாய்க்கு நம்பி கைப்பற்றியுள்ளது. இது சம்பந்தமாக பேசிய அவர் சென்னை அணி நிர்வாகத்தின் தலைமையாளர் “எவ்வளவு பெரிய தொகை என்றாலும் உன்னை நாங்கள் மீண்டும் கைப்பற்றுவோம் என்று என்னிடம் கூறியிருந்தார்கள்”. அவர்கள் கூறியபடியே என்னை மிகப்பெரிய தொகைக்கு இறுதியில் கைப்பற்றியும் விட்டார்கள். மீண்டும் சென்னை அணியில் விளையாட போவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் சென்னை அணி அவ்வளவு தொகை கொடுத்து தன்னை வாங்காமல் போயிருந்தால், நிச்சயமாக தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி இருப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சென்னை அணியை தவிர்த்து வேறு ஒரு அணியில் விளையாட வேண்டும் என்றால் ராஜஸ்தானில் விளையாடவே தனக்கு அலாதி விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளராக மட்டுமின்றி சமீப நாட்களில் பேட்டிங்கிலும் மிக சிறப்பாக விளையாடி வரும் அவர் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இனி வரும் ஐபிஎல் தொடர்களிலும் சென்னை அணிக்காக தீபக் சஹர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையை கிளப்புவார் என்று சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -