நேரில் சென்று பாஃப் டூ பிளிசிஸ் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தும் சி.எஸ்.கே ரசிகர்கள்

0
159
CSK Fans supporting Faf du Plessis

நவி மும்பையின் டி.ஒய் பாட்டில் மைதானத்தில், இன்று ஐ.பி.எல்-ன் ஆறாவது போட்டியில் கொல்கத்தாவும் பெங்களூர் அணிகளும் மோதி வருகிறது. டாஸ் வென்று பந்துவீச முடிவுசெய்த பாஃப் டூ பிளிசிஸ் கேப்டனாக உள்ள பெங்களூர் அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு கொல்கத்தா அணியை 128 ரன்களுக்கு சுருட்டியது!

இந்த ஐ.பி.எல் சீசனில் பெங்களூர் அணிக்குத் தலைமையேற்று இருக்கும் பாஃப் டூ பிளிசிஸ் கடந்த வருடம் சென்னை அணிக்காக 600 ரன்கள் குவித்தவர். சென்னை இரசிகர்களால் எல்லைச்சாமி என்று அழைக்கப்படும் இவர், சென்னைக்கு பல முக்கியமான ஆட்டங்களில் யார் விக்கெட்டை இழந்தாலும், தனியாய் நின்று ஆடி வெல்ல வைத்திருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த மெகா ஏலத்தில் பாஃப் டூ பிளிசிஸை சென்னை அணி எப்படியும் வாங்கிவிடும் என்று நினைத்திருந்த இரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. முடிவில் பாஃப் டூ பிளிசஸை பெங்களூர் அணி வாங்கியதோடு இல்லாமல் கேப்டனாகவும் அறிவித்தது!

பெங்களூர் அணிக்கான தனது முதல் ஆட்டத்தில் 7 சிக்ஸர்களோடு பாஃப் டூ பிளிசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள் குவிக்க, சென்னை இரசிகர்களின் ஏமாற்றம் இருமடங்காக அதிகரித்துவிட்டது. சமூகவலைத்தளங்களில் மிஸ்யூ பாஃப் என பலர் பதிவிட்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் நவி மும்பையில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் விளையாடி வரும் போட்டியைக் காண சென்னை இரசிகர்கள் சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் வைத்திருந்த பதாகையில் “நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர்கள். ஆனால் பாஃப்பிற்காக இங்கு வந்திருக்கிறோம்” என்று ஆங்கிலத்தில் அச்சடித்து வைத்து, அவர் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!

- Advertisement -