லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட 6 நட்சத்திர வீரர்கள்

0
5499
Virender Sehwag Test

கிரிக்கெட்டில் சச்சினின் 30,000+ சர்வதேச ரன்கள், ஜாக் ஹுப்ஸின் 199 சதங்கள், மேற்கிந்திய தீவுகளின் 29 தொடர் டெஸ்ட் சீரிஸ் வெற்றிகள் என பல முறியடிக்கபடாத சாதனைகள் உள்ளன. ஒரே இன்னிங்சில் பிரைன் லாரா விளாசிய 400 ரன்களும் இதுவரை முறியடிக்க இயலாத ஒன்றே. டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய சாதனைகள் படைகப்பட்டிருந்தாலும், பிரைன் லாராவின் 400 ரன்களுக்கு மதிப்பு அதிகம். 1994 வரை கேரி சாபர்ஸ் அடித்த 365* ரன்கள் தான் டெஸ்ட் போட்டிகளில் ஒரு தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் லாரா 375 ரன்கள் விளாசி, சாபர்ஸின் 38 ஆண்டு சாதனையை முறியடித்தார்.

அதன் பின்னர் ஆஸ்திரேலிய நாட்டின் அதிரடி தொடக்க வீரர் மாத்யூ ஹாய்டன் 380 ரன்கள் அடித்து வரலாற்றில் முதலிடம் பிடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இச்சாதனை நீண்ட காலம் நிலைக்கவில்லை. 8 வருடங்கள் கழித்து யாரும் நினைத்துப்பார்க்க முடியாத ஓர் இமாலய ஸ்கோருக்கு லாரா சென்றார். இங்கிலாந்து அணிக்கு எதிராக சுமார் இரண்டரை நாட்கள் ஓயாமல் பேட்டிங் செய்து 400 ரன்களை சேர்த்தார். பிரைன் லாரா இந்த சாதனையை நிகழ்த்தி 11 வருடங்கள் ஆகின்றன. அதை இன்றுவரை எவராலும் அசைக்க முடியவில்லை. ஒரு சில வீரர்கள் இதை முறியடிக்க முயற்சி செய்தனர் ஆனால் யாரும் அதில் வெற்றிபெறவில்லை. லாராவின் அதிகபட்ச ஸ்கோரை கடக்க முயன்ற 6 வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

6. குமார் சங்கக்காரா – 319

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 2006ல் சங்கக்காரா 13 ரன்கள் வித்தியாசத்தில் தன்னுடைய முதல் முச்சதத்தை தவற விட்டார். நழுவவிட்ட இந்த முச்சதத்தை 2014ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளாசி சரித்திரத்தில் இடம் பிடித்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில், சங்கக்காரா தன் முழு திறனையும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.

முதலில் நிதானமாக ஆட ஆரம்பித்த அவர், போக போக எதிரணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். ஒரு முனையில் குமார் சங்கக்காரா விரைவாக ரன்கள் சேர்க்க, மறுமுனையில் ஷகிப் விக்கெட்டுகளை அள்ளிக் கொண்டிருந்தார். சங்கக்காரா 250 கண்டத பிறகு இலங்கை அணி அடுத்தடுத்த ஓவர்களில் 8வது மற்றும் 9வது விக்கெட்டை இழந்து.

கடைசி விக்கெட் மட்டுமே கையில் இருந்ததால், சங்கக்காரா அடித்து ஆட ஆரம்பித்தார். தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து தன்னுடைய முதல் முச்சதத்தை அவர் பதிவு செய்தார். விக்கெட் இல்லாத காரணத்தால், அனைத்து பந்தையும் பவுண்டரிக்கு விரட்டும் நிலை ஏற்ப்பட்டது. அப்போது லாங் ஆன் திசையில் கேட்ச் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் சங்கக்காரா.

- Advertisement -

5. விரேந்தர் சேவாக் – 319

இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரர்கள் என்றால் நம் நினைவுக்கு வருபவர்கள் சச்சின், டிராவிட் மற்றும் லக்ஷ்மன். ஆனால் அவர்களில் யாவரும் முன்னூறு ரன்களை கூடத் தாண்டவில்லை என்பது ஓர் ஆச்சரியம். பலம் வாய்ந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக விரேந்தர் சேவாக் அதிரடியாக ஆடி முச்சதம் விளாசினார்.

ஸ்டெய்ன், மார்க்கல், காலிஸ் என அனைத்து பௌலர்களின் பந்துகளையும் நாலாப்பக்கம் சிதறடித்தார். பால் ஹாரிஸ் எனும் ஸ்பின்னர் வீசிய 108 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார் சேவாக். 150 முதல் 250 ரன்கள் வரை அவரது ஸ்டிரைக் ரேட் அபாரமாக இருந்தது.டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அதிவேக முச்சதத்தையும் விளாசினார். ஆனால் அவரால் லாராவின் 400 ரன்களை நெருங்க முடியவில்லை.

4. மைக்கல் கிளார்க் – 329*

Michael Clark

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மைக்கல் கிளார்க்கின் சிறப்பான ஆட்டத்தைக் கண்டு, லாரவின் சாதனை தகர்த்தப்படும் என்று எண்ணினர். ஆனால் 329 ரன்களில் இருந்த போது கேப்டன் கிளார்க் டிக்ளர் செய்தார். முதலில் பந்துவீசிய ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 191 ரன்களுக்கு சுருட்டியது.

முதல் நாள் முடிவில் கிளார்க் 47 ரன்களில் இருந்தார். இரண்டாம் நாளில் நிலைத்து ஆடிய அவர், 204 ரன்கள் சேர்த்தார்.இந்திய பந்துவீச்சாளர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் கிளார்கின் விக்கெட்டை பறிக்க முடியவில்லை. போட்டியில் 7 செஷன்கள் மீதம் இருந்தும், மைக்கல் கிளார்க் டிக்ளர் செய்தார். டான் பிராட்மானின் 334 மற்றும் லாராவின் 400 என இரண்டு பெரிய சாதனையும் அவர் தவற விட்டார்.

3. கிறிஸ் கெயில் – 333

உலகிலுள்ள தலைசிறந்த அதிரடி ஒப்பனர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் சேர்க்கும் திறன் கொண்டவர். அதற்கு சிறந்த உதாரணம், ஐ.பி.எலில் அவர் அடித்த 175 ரன்கள். ஒருநாள் போட்டிகளிலும் அவர் அதிரடியை வெளிப்படுத்தி ஒரு இரட்டைச் சதம் விளாசியுள்ளார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளைப் போலவே, டெஸ்டிலும் அவரது வழக்கத்தை தொடர்ந்தார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. எப்போதும் போல கிறிஸ் கெயில் அதிவேகமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். மேற்கிந்திய அணியின் ரன் ரேட் ஐந்தை தொட்டது. 221 பந்துகளில் கெயில் 200 ரன்களை கடந்தார்.

200 ரன்களை கடந்த பிறகு, வழக்கத்திற்கு மாறாக அவர் நிதானமாக ஆடத் தொடங்கினார். தான் சந்தித்த 393வது பந்தில் அவர் முச்சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையைக் கொண்டார். ஆனால், லாரா நிர்ணயித்த 400 ரன் இலக்கை அவரால் அடைய இயலவில்லை.

2. டேவிட் வார்னர் – 335*

பாகிஸ்தான் அணி 2019ல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு, டேவிட் வார்னர் சிம்மசொப்பனமாக இருந்தார்.

பகலிரவு ஆட்டமான இப்போட்டியில் வார்னர் பல சாதனைகளைத் தகர்த்தார். லபுஷேன் மற்றும் வார்னர் ஜோடி சேர்ந்து 361 ரன்கள் சேர்த்தனர். கடைசி வரை போராடியும், பாகிஸ்தான் அணி பவுலர்களால், வார்னரின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. டேவிட் வார்னர் 335 ரன்னில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கேப்டன் டிம் பெயின் டிக்ளர் செய்தார்.

இன்னும் ஒரு ஒரு மணி நேரம் ஆட்டம் நடந்திருந்தால், டேவிட் வார்னர் நிச்சயம் 400 ரன்களை கடந்திருப்பார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பெயின் அதை பொய்யாக்கினார். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

1. மஹேலா ஜெயவர்த்தனே – 374

Mahela Jayawardene

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 14 ரன்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. மூன்றாவது விக்கெட்டை எடுக்க தென்னாபிரிக்கா வீரர்கள், 624 ரன்கள் காத்திருக்க வேண்டும் என்று யாரும் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெயவர்த்தனே – சங்கக்காரா, தென்னாபிரிக்கா வீரர்களை அங்குமிங்கும் அலைய வைத்தனர்.

ஒரு முனையில் சங்கக்காரா தனது இயல்பான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் மறுமுனையில் ஜெயவர்த்தனே சற்று தடுமாறினார். ஆனால் அவர் விக்கெட்டை பறி கொடுக்கவில்லை. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜெயவர்த்தனே 224 ரன்களில் களத்தில் இருந்தார்.

மிகவும் நிதானமாக ஆடி அவர் முச்சதம் அடித்தார். மஹேலா ஜெயவர்த்தனே, 350 ரன்கள் தாண்டிய பிறகு அனைவரும் லாராவின் சாதனை முறியடிக்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர். இடைவேளையின் போது அவர் 357 ரன்னில் இருந்தார். ஆண்ட்ரே நெல் வீசிய பந்தில் ஸ்டெம்புகள் சிதற அவர் ஆட்டமிழந்தார். அன்று ரசிகர்கள் மட்டுமல்ல ஜெயவர்த்தனேவும் சோகமாக தான் பெவிலியன் திரும்பினார்.