அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20யில் உம்ரான் மாலிக்கிற்கு ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுத்ததற்கு இதுதான் காரணம் – கேப்டன் பாண்டியா விளக்கம்

0
115
Umran Malik and Hardik Pandya

தற்போது இந்திய அணியின் ஒரு அணி அயர்லாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அயர்லாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது!

டாஸை ஹர்திக் பாண்ட்யா வென்று பீல்டிங் என தேர்வு செய்த பின்னர் மழை குறுக்கீட்டால், ஆட்டம் அணிக்கு 12 ஓவர்கள் என குறைக்கப்பட்டு தாமதமாகத் தொடங்கியது. இந்திய அணி தரப்பில் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு ஆடும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது!

- Advertisement -

இந்திய அணியின் ஆரம்பக்கட்ட சிறப்பான பந்துவீச்சால் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அயர்லாந்து அணியை, 33 பந்துகளில் அதிரடியாய் 64 ரன்கள் குவித்து, 12 ஓவர்களில் 108 ரன்களை எட்ட வைத்தார் ஹாரி டெக்டர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, ஆவேஷ்கான், யுஷ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்பு ஆடிய இந்திய அணி இஷான் கிஷானின் ஆரம்பக்கட்ட அதிரடி ஆட்டம், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் 12 பந்தில் 24 ரன்கள், தீபக் ஹூடாவின் 29 பந்தில் 47 ரன்கள் மூலம் 17.2 ஓவர்களில் மிகச் சுலபமாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இஷான் கிஷான் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த பொழுது, ஆட்டத்தின் போக்கின் திடீரென ஒரு மாறுதல் உண்டானாலும், தீபக் ஹூடா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடியின் அதிரடி ஆட்டத்தை மொத்தமாய் மாற்றி, பத்து ஓவர் வரைக்கும் கூட ஆட்டத்தைச் செல்ல விடாமல் முடித்து விட்டது!

இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்ட உம்ரான் மாலிக்கிற்கு, ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீச கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வாய்ப்பளித்தார். அந்த ஒரு ஓவரில் உம்ரான் மாலிக் 14 ரன்கள் வழங்கியதால், மேற்கொண்டு அவருக்கு வீச ஓவர்கள் வழங்கப்படவில்லை. இது சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வியாக பரவி இருந்தது. இதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்காமலே இருந்திருக்கலாம் என்ற அளவில் பேசப்படுகிறது!

- Advertisement -

இது குறித்துத் தற்போது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார், அதில் அவர் “உம்ரான் மாலிக் ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். அவர் புதிய பந்தை விட பழைய பந்தில் சிறப்பாகச் செயல்படுவார் என்று உணர்ந்தேன். நான் அவருடன் இதைப்பற்றி ஆட்டத்தின் நடுவில் பேசினேன். இதனால் குறைந்த ஓவர் போட்டியில் அவருக்கு மேற்கொண்டு ஓவர்கள் தரவில்லை. அடுத்த ஆட்டத்தில் அவருக்கான முழுமையான ஓவர்கள் வழங்கப்படும். தொடரில் முதல் ஆட்டத்தை வெல்வது எப்பொழுதும் முக்கியமானது. முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்!