ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும்பொழுது, சேவாக் என்னிடம் வந்து இப்படி பேட்டிங் செய்யுமாறு பேசினார் என தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் முன்னாள் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் பகிர்ந்துள்ளார்
ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களை அடையாளம் கண்டு உலகிற்கு வெளிக்காட்டி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களையும் விளையாட அனுமதித்து இந்திய வீரர்களுடன் ஒற்றுமையை வளர்த்திருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கென் வில்லியம்சன் ஷென் வார்னே, ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிரிஸ்ட், ஜெயவர்த்தனே, சங்ககாரா என பல வெளிநாட்டு ஜாம்பவான்களை இந்த வரிசையில் அடுக்கலாம். அவர்கள் தற்போது இந்திய வீரர்களுடன் எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்பதை நாம் பார்த்து வருகிறோம்
அப்படி ஒருவராக இருப்பவர்தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மாற்றும் வேலைப்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த புத்தகம் வெளிவந்துள்ளது. டெய்லர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த பல நிகழ்வுகளை அதில் பகிர்ந்து உள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக விளையாடும் பொழுது, நிறத்தை வைத்து கேலி செய்த சம்பவத்தை அவர் பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் மிகுந்து பேசுபொருளாக மாறியது. 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ராஸ் டைலரின் நினைவிலிருந்து எப்போதும் நீங்காது. ஏனெனில் அப்போது 1.3 அமெரிக்க டாலர்களுக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் ஆகும்.
அப்போது டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்தவர் வீரேந்திர சேவாக். ஒருநாள் மாலை போட்டி முடிந்த பிறகு டெல்லியில் உள்ள தனது ஹோட்டலுக்கு வீரர்களை அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களுடன் ராஸ் டைலரும் சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த டிவியில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. அதை ரசித்துக்கொண்டே ராஸ் டைலர் இறால் வகை மீன்களை நன்றாக சுவைத்து சாப்பிட்டிருக்கிறார்.
“அடுத்த நாள் எங்களுக்கு போட்டி இருந்தது. அதில் நானும் சேவாக்-கும் களத்தில் இருந்தோம். மைதானத்தின் பல பகுதிகளில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை சேவாக் விளாசிக் கொண்டிருந்தார். ஆனால் எங்களைப் போன்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அந்த மைதானம் சற்று கடினமாக இருந்தது. அந்த சமயம் சேவாக் என்னிடம் நேராக வந்து கிளவுஸ் மூலம் எனது தோளில் தட்டிக்கொடுத்து, “எப்படி இறால் மீனை நன்றாக சாப்பிட்டாயோ, அதைப்போல நன்றாக ரசித்து பேட்டிங் செய்” என அறிவுரை கூறினார். அந்த சம்பவம் எனக்கு தற்போது வரை நீங்கா நினைவில் இருக்கிறது.
சேவாக் ஹோட்டலில் எனக்கு இறால் மிகவும் பிடித்திருந்தது. அதை நான் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் என்பதை சேவாக் கவனத்தில் கொண்டிருக்கிறார். அதை மறக்காமல் அடுத்த நாள் போட்டியில் வந்து என்னிடம் குறிப்பிட்டு அறிவுரை கூறினார் என்பது ஆச்சரியமாகவும் இருந்தது.” என தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் ராஸ் டெய்லர் பதிவு செய்திருந்தார்.