‘பாகிஸ்தானுடன் அந்த கடைசி பாலில் நான் இதைத்தான் பண்ண போறேன்னு அஸ்வின் என்கிட்ட சொல்லிட்டு போனாரு’ – பவுலிங் கோச் பேட்டி!

0
6562

பாகிஸ்தானுடன் கடைசி பந்து எதிர்கொள்வதற்கு முன்னர் அஸ்வின் என்னிடம் என்ன கூறிவிட்டு உள்ளே சென்றார் என்று சமீபத்திய பேட்டி தெரிவித்திருக்கிறார் பவுலிங் கோச் பரஸ் மாம்பரே.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் அடித்திருந்தது. 160 ரன்கள் என்ற சற்று சிக்கலான இலக்கை துரத்திய இந்திய அணி 31 ரண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

ஆனால் விடாமுயற்சியாக ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றியை நோக்கி எடுத்துச் சென்றனர். 19 மற்றும் 20வது ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்தபோது, இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 31 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அபயகரமான பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவ்ப் 19வது ஓவரை வீசினார். அவரது ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை பிறக்கச் செய்தார் முன்னாள் கேப்டன் விராத் கோலி. 20 வது ஓவர் சுழல் பந்துவீச்சாளர் நவாஸ் வீசினார்.

அதில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். நடுவில் வீசப்பட்ட நோ பாலில் ஒரு சிக்சர் மற்றும் மூன்று ரன்கள் அடிக்க, கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது, தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

கடைசி பந்தை எதிர்கொள்வதற்கு அஸ்வின் உள்ளே வந்தார். அப்போது லாவகமாக பந்தை அடிக்காமல் அப்படியே விட்டதால் ஒய்டு ஆனது. அடுத்து பந்தை அழகாக அடித்து ஒரு ரன் எடுத்துக் கொடுத்து, வெற்றியை பெற்று தந்தார்.

அந்த பரபரப்பான சூழலில் கடைசி பந்து எதிர்கொள்வதற்கு முன்னர், பயிற்சியாளர்கள் அவரிடம் என்ன கூறி உள்ளே அனுப்பினார்கள்? என்று பலரும் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருந்தனர். அதற்கு சமீபத்திய பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார் பவுலிங் கோச் பரஸ் மாம்பரே.

அவர் கூறுகையில், “நாங்கள் அஸ்வினுக்கு பயிற்சி கொடுக்க தேவையில்லை. அஸ்வின் தான் எங்களுக்கு பல்வேறு டிப்ஸ் கொடுப்பார். அந்த அளவிற்கு அவர் ஒரு ப்ரோ வீரர். உண்மையில் என்ன நடந்தது? என்றால், கடைசி பந்து எதிர்கொள்ள செல்வதற்கு முன்னர் அவரே என்னிடம் வந்து, நான் இதைத்தான் செய்யப் போகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அஸ்வின் கிரிக்கெட் பற்றி, அழுத்தம் நிறைந்த சூழல் பற்றி நன்கு உணர்ந்தவர்.” என்று பெருமிதமாக கூறினார்.