114 வருடகால சாதனையை முறியடித்த தமிழன் ரவிச்சந்திர அஸ்வின்

0
1091

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 578/10 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், சிப்ளி களமிறங்கினர். 2-வது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீச கேப்டன் விராட் கோலி மண்ணின் மைந்தனான அஸ்வீனை அழைத்தார். அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதன் மூலம், உலகக் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றைப் படைத்தார். அதாவது, கடந்த 114 ஆண்டுகளாக 2-வது இன்னிங்ஸ் தொடக்கத்தில் முதல் ஓவர் முதல் பந்தில் எந்த சுழற்பந்துவீச்சாளரும் விக்கெட் வீழ்த்தியதில்லை. இந்த சாதனையை 14 ஆண்டுகளுக்குப்பின் இந்திய வீரர் அஸ்வின் நிகழ்த்தி புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.

கடைசியாக கடந்த 1907-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் பெர்ட் வோக்லர் 2-வது இன்னிங்ஸில் முதல் ஓவரில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார். முதல் முன்று நாட்களை காட்டிலும் நான்காம் நாள் பந்துவீச்சார்களுக்கு சாதகமாக அமைந்தது . இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் மொத்தமாக 46.3 ஓவர்கள் ஆடி 178 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து ஆப் ஸ்பின் கிங் என இங்கிலாந்து அணிக்கு நினைவுட்டிவிட்டார். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இந்தியா வெற்றிப்பெற 420 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.


முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடி வருகின்றனர் . நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் நாளை மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா. பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்தது போல இறுதி நாள் மேஜிக் நடக்குமா என இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -