கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. விராட் கோலி இந்திய மண்ணில் கடைசியாக இந்திய அணியை கேப்டனாக தலைமை தாங்கிய தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் இரண்டாவது போட்டி மும்பையில் நடைபெற்றது. மும்பையில் பிறந்து வளர்ந்த அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து அணி சார்பாக களம் இறங்கி, அவர் பிறந்த மண்ணிலேயே இந்திய அணிக்கு எதிராக விளையாடியது உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
அந்தப் போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தார். இதற்கு முன் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவர்களுடன் 3வது வீரராக இந்த வரலாற்றுச் சாதனை பட்டியலில் அந்த டெஸ்ட் போட்டியின் மூலம் அஜாஸ் பட்டேலும் இணைந்தார்.
விராட் கோலிக்கு குறித்த அஜாஸ் பட்டேலின் ட்விட்டர் பதிவு
சமீபத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி வெளியேறியது நம் அனைவருக்கும் தெரியும். அஜாஸ் பட்டேல் தற்பொழுது விராட்கோலி குறித்து ட்விட்டர் வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு, இந்திய அணி உங்களது தலைமையில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் தரம் உங்கள் தலைமையில் நிறைய மாறி இருக்கிறது என்றும், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது என்றும் பாராட்டியுள்ளார்.
Congrats to @imVkohli on your tenure as @BCCI captain, the legacy and direction you leave behind has forever changed Indian cricket. 👏🏽 Much like we saw @BLACKCAPS by @Bazmccullum
— ajaz patel (@AjazP) January 17, 2022
இறுதியாக நான் உங்களுடைய நடவடிக்கைகளில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லத்தை பார்த்திருக்கிறேன். நீங்கள் அவர் போலவே இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
கேப்டனாக விராட் கோலி மற்றும் பிரண்டன் மெக்கல்லம்
விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்தவித கோப்பையையும் கைப்பற்றவில்லை என்றாலும், அவரது தலைமையில் இந்திய அணி 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
2019-2021 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் கூட இந்திய அணி அவரது தலைமையில் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனையும் படைத்தது.
மறுபக்கம் பிரண்டன் மெக்கல்லம் தலைமையில் நியூசிலாந்து அணி முதல் முறையாக 2015ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பிரண்டன் மெக்கல்லம் தலைமையில் நியூசிலாந்து அணியின் அடுத்த கட்டத்திற்கு சென்று அதை நாம் அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதுபோலவே விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதையே அஜாஸ் பட்டேல் தற்பொழுது ஒப்பிட்டு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.