தோனி போனபிறகு இந்தியா என்ன பண்ணுச்சு சொல்லுங்க; மட்டமான டீமா இந்தியா மாறிடுச்சு – மைக்கல் வாகன் சாடல்!

0
1828

2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி மட்டமான அணியாக மாறிவிட்டது என விமர்சித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து பரிதாபமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

- Advertisement -

கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றது. அதன்பிறகு தொடர்ச்சியாக எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. சோக்கர்கள் என்று அழைக்கும் அளவிற்கு பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

15 வருடங்களாக டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. 11 வருடங்களாக ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வெல்லவில்லை.

இப்படி ஐசிசி நடத்தும் தொடர்களில் சொதப்பலான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி வருவதால் பல்வேறு விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. குறிப்பாக இத்தனை திறமையான வீரர்களை வைத்துக் கொண்டு இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் மிகவும் மட்டமான அணியாக செயல்பட்டு வருகிறது என்று விமர்சித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

- Advertisement -

“ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை இந்திய அணி 2011 ஆம் ஆண்டு வென்ற பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் என்ன சாதித்து இருக்கிறது? ஒன்றுமே கிடையாது. தொடர்ந்து லிமிடெட் ஓவர் போட்டிகளில் தரம் குறைவான அணியாக மாறி வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் நிறைய கற்றுக் கொண்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கிருக்கும் இந்திய வீரர்களை வைத்து இந்தியா என்ன சாதித்து இருக்கிறது. இதுவரை உலக கோப்பை வெல்வதற்கே போராடி வருகிறது. என்ன தவறு நடக்கிறது என்று அணி நிர்வாகம் பரிசீலனை செய்வதில்லை என்றே நினைக்கிறேன்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் இந்தியாவிற்கு இருக்கும் குறையை எடுத்துச் சொல்ல பயப்படுகிறார்கள். பிசிசிஐ என்ன செய்து விடுமோ? என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள். என்ன தவறு என்று நேராக எடுத்துரைக்க வேண்டும். இந்திய அணியின் எதிர்காலம் தான் முக்கியம் என்று அவர்கள் சரியாக எடுத்துரைக்க வேண்டும்.” என்றார்.