ஸ்டேடியம் இருக்கைகளை உடைத்து பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கிய ஆப்கான் ரசிகர்கள் – வீடியோ!

0
125

ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறிய விரக்தியில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தின் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்திய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் மோதின. ஆப்கானிஸ்தான் அணி போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற இன்னும் வாய்ப்புகள் உயிர்ப்புடன் இருக்கும். ஆகையால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய ரசிகர்கள் ஆதரவு தந்தனர்.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு வந்த வீரர்கள், சீரான இடைவெளிகளில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக ஜட்ரான் 35 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 129 ரன்கள் அடித்திருந்தது.

மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருப்பதால் 130 ரன்கள் என்ற இலக்கை கடப்பது சற்று கடினமானதாக தெரிந்தது. பந்துவீச்சிருக்கு பெயர் போன ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தது. விளையாடிய முதல் பந்திலேயே பாபர் அசாம் ஆட்டம் இழந்தார். ரிஸ்வான் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, 18 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி திணறி வந்தது.

மிடில் ஆர்டரில் இப்திகர் அகமது மற்றும் சதாப்கான் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இப்திகர் அகமது 30 ரன்களுக்கும் சதாப் கான் 36 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதில் கடும் சிக்கல் ஆனது. ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது நிச்சயம் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிடும் என்று இருந்தபோது, 11 வது வீரராக களமிறங்கிய நசீம் சா கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர்கள் விலாசி எந்தவித சிக்கலும் இன்றி பாகிஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

மைதானத்தில் குவிந்திருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் ஒரு நிமிடம் மயான அமைதியாக காணப்பட்டனர். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதால் எளிதாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோத உள்ளனர். நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்திருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த ஆத்திரத்தை வெளிப்படுத்த மைதானத்தில் இருந்த இருக்கைகளை உடைத்து அங்கு அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இது போன்ற செயல்களை ரசிகர்கள் செய்வது பெரும் இழுக்காக உள்ளது என்று பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.