முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா, எதிர்காலத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார். 37 வயதான புஜாரா,கடந்த ஆகஸ்ட் 24, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில், கிரிக்கெட் வல்லுனராக பணிபுரிந்தது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளித்தது என்பதையும் புஜாரா வெளிப்படுத்தினார். இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த வகையில் பங்களிக்க முடியுமோ, அதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தயாராக இருக்கிறேன்:
இது குறித்து பேசிய அவர்,”நிச்சயமாக ஒளிபரப்பு வேலையை நான் ரசித்தேன். எனவே, அதைத் தொடர்ந்து செய்வேன். பயிற்சியாளர் பணி அல்லது NCA, BCCI சிறப்பு மையம்மில் ஏதேனும் பணி என்றால், அதற்கு நான் தயாராக இருப்பேன். இதைப் பற்றி நான் உண்மையாக சிந்திக்கவில்லை.
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது முடிவு எடுப்பேன். முன்பே கூறியிருப்பது போல, கிரிக்கெட் விளையாட்டுடன் இணைந்திருக்க விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த வகையில் பங்களிக்க முடியுமோ, அதைச் செய்ய மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்றார் புஜாரா.
தாயை இழந்தேன் என உருக்கம்:
“எனது தந்தைக்கு இது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. அவரது கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு எனக்கு உத்வேகமாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால், எனது தாயையும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் 17 வயதில் இருந்த போது புற்றுநோயால் என் தாயை இழந்தேன். ஆனால் அவர் எனக்கு நிறைய கற்றுத் தந்தார்.
நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று அவர் எனக்கு கற்பித்தார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 17 ஓவர் வீசிய முகமது ஷமி.. சதம் அடித்த ஆர்சிபி கேப்டன்.. துலீப் கோப்பையில் முதல் நாள் நடந்தது என்ன?
என் மனைவி பூஜாவும், ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக உருவாக ஒரு கிராமமே தேவை என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்,” என்று புஜாரா கூறினார்.புஜாரா தனது கடைசி சர்வதேச போட்டியை இந்தியாவுக்காக 2023 ஜூன் மாதம் ஆடினார்.அதன் பிறகு அவர் அணியில் இடம்பெறவில்லை. புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடினார். டெஸ்ட் வடிவில் 43.60 சராசரியுடன் 7195 ரன்கள், 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.






