ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு நல்ல விருந்தாக அமையும். ஆனால் கடந்த சீசன் ஒரு தலைப்பட்சமாக பேட்ஸ்மேனுக்கு சாதகமாக மாறி இருந்தது.
கடந்த தொடரில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் பட்டியலில் டாப் 10 இடத்தில் ஒன்பது இடம் கடந்த சீசனில் அடிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது மைதானத்தின் அளவு குறைக்கப்பட்டு ஆடுகளமும் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கிறது.
பிசிசிஐ அனுமதி:
மேலும் இம்பாக்ட் வீரர் விதி மூலம் கூடுதல் பேட்ஸ்மேனும் களத்திற்கு வருகிறார். இதன் காரணமாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் பௌலர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மாற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக பந்தில் ஒரு பக்கத்தை பளபளவென வைத்துக் கொள்ளவும், மறுபக்கத்தை கடினமாக வைக்கவும் வீரர்கள் தங்களது எச்சிலை பயன்படுத்துவார்கள்.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட போது ஐசிசி இந்த எச்சிலை தடவ தடை விதித்தது. இது ஐபிஎல் தொடரிலும் பின்பற்றப்பட்டது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்த தடையை நீக்க வேண்டும் என்று முகமது சமி வலியுறுத்தி இருந்தார். தற்போது கொரோனா இல்லாத சூழலில் மீண்டும் பந்தில் எச்சிலை தடவ பிசிசிஐ அனுமதி அளித்திருக்கிறது.
பவுலர்களுக்கு பலன் அளிக்குமா?
இது பவுலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு அளவுக்காவது தங்களுக்கு கை கொடுக்கும் என நம்புகின்றனர். தோய்வான ஆடுகளத்தில் கடைசி கட்டத்தில் பந்து வீசும் போது பந்து கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இன்னும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுநர்கள் பந்தில் எச்சில் தடவ அனுமதி அளித்தது நல்ல முடிவாக இருந்தாலும் இது ஐபிஎல் தொடரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: KKR vs RCB: ஆரம்பமே இப்படியா.. மழையால் ஐபிஎல் 2025 முதல் போட்டி நடக்குமா.?. வெளியான கொல்கத்தா மைதான வானிலை அறிக்கை
போட்டி 20 ஓவரில் முடிந்து விடும் என்பதால் அதற்குள் பந்து பழையதாக மாறாது என்றும், இது ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் கை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளம் மற்றும் பவுண்டரி கோடுகளை அதிகப்படுத்துதல் மட்டுமே நல்ல முடிவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.






