வெஸ்ட்இன்டீஸ் மகளிர் கிரிக்கெட்டின் வலதுகை கிறிஸ் கெய்ல் என்றே வீராங்கன் டோட்டின் அவர்களைக் கூறலாம். வெஸ்ட்இன்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான இவர், பந்துவீசும் பவுலர்களை பற்றிக் கவலைப்படாமல் முதல் பந்திலிருந்தே சர்வ சாதாரணமாய் அடித்து நொறுக்கக் கூடியவர். மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வீராங்கனை என்ற உலகச் சாதனைக்குச் சொந்தக்காரராக இருப்பவர்!
வெஸ்ட்இன்டீஸ் பார்படோஸை சேர்ந்த இவரது முழுப்பெயர் டேன்ந்ரா ஜலீசா சாஹிரா டோட்டின் என்பதாகும். இவரது உடல்மொழியால், அதிரடியால் இவரை வேர்ல்ட் பாஸ் என்று சக அணியினர் அழைப்பார்கள்.
தற்போது 31 வயதாகியுள்ள டோட்டின் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 24 ஜூலை 2008 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். பின்பு அதே மாதம் அதே ஆண்டு டி20 போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராகவே அறிமுகம் ஆனார்!
இவர் 143 ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் உள்பட 30.54 ரன் சராசரியில் 3727 ரன்களையும், 124 டி20 போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட 25.93 ரன் சராசரியில் 2697 ரன்களையும் குவித்துள்ளார்!
தற்பொழுது 31 வயதுதான் இவருக்கு ஆகிறது. இவரால் இன்னும் குறைந்தது மூன்று நான்கு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க முடியும். இப்பொழுது இங்கிலாந்து காமன்வெல்த் போட்டிகளில் வெஸ்ட்இன்டீஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் ஓய்வை முடிவை அறிவித்திருக்கிறார். அதில் அவர் இந்த முடிவு நீண்ட சிந்தனைக்குப் பிறகே எடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்!
Thanks to all for the love and support with in my past 14 years of playing cricket for West Indies! I look forward to be playing domestic cricket around the world pic.twitter.com/Vmw6AqpYQJ
— Deandra Dottin (@Dottin_5) July 31, 2022
டோட்டின் அவரது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு குறித்தான ட்வீட்டர் அறிக்கையில் “என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் கடக்க வேண்டிய பல தடைகள் இருந்தன. இருப்பினும் தற்போதைய காலநிலை மற்றும் அணியின் கலாச்சாரம் ஆகியவைகள் எனது ஆர்வத்தை தூண்டி என் திறனை மேலும் வளர்ப்பதாக இல்லை. குழு சூழல், குழு கலாச்சாரத்தை இனியும் என்னால் பின்பற்ற முடியாது என்று நான் உணர்கிறேன். இந்த முடிவு நீண்ட சிந்தனைக்குப் பிறகே வந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்!
மேலும் அதில் “கடந்த 14 வருடங்களாக வெஸ்ட்இன்டீஸ் அணிக்காக விளையாடிய எனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி! உலகம் முழுவதும் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்!